சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது

காட்பாடி அருகே சரக்கு ரெயில் திடீரென தடம்புரண்டு 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. இந்த விபத்து காரணமாக ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-10 22:34 GMT
ராணிப்பேட்டை,

சென்னை-பெங்களூரு-கோவை இடையே அமைக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதை காட்பாடி வழியாக செல்கிறது. இந்த வழியாக 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் இருபுறமும் அதிவேகத்தில் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை சென்னையிலிருந்து கர்நாடகா மாநிலம் ஒய்ட்பீல்டு என்ற இடத்திற்கு கன்டெய்னர்களுடன் கூடிய சரக்கு ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ரெயிலில் 40 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. அந்த ரெயில் சேவூர் ரெயில் நிலையத்தை கடந்து சுமார் ½ கி.மீ. தூரம் செல்வதற்குள் திடீரென தடம்புரண்டது. அப்போது 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. இதனை அறிந்த என்ஜின் டிரைவர் சரக்கு ரெயிலை உடனே நிறுத்தினார். தடம்புரண்ட பெட்டிகள் அனைத்தும் ஒருபுறம் சிறிது சாய்ந்த நிலையில் நின்றன.

தகவல் அறிந்ததும் கோட்ட ரெயில்வே மேலாளர் நவீன் குலாட்டி தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். மேலும் சென்னை, காட்பாடி மற்றும் அரக்கோணத்திலிருந்து சுமார் 100-க்கும் அதிகமான மீட்பு பணியாளர்கள் விரைந்து வந்து உடைந்த தண்டவாளங்களை சரி செய்யும் பணியிலும், தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை தூக்கி நிறுத்தி அதனை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியிலும் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

சரக்கு ரெயில் சென்ற தண்டவாளம் உடைபட்டு அதனால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து காரணமாக பெங்களூருவில் இருந்து காட்பாடி வழியாக வரும் ரெயில்களும், சென்னையிலிருந்து காட்பாடி வழியாக பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரெயில்களும் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பின்னர் மற்றொரு தண்டவாளம் வழியாக ஒவ்வொரு ரெயிலாக இயக்கப்பட்டன. இந்த ரெயில் விபத்தினால் அனைத்து ரெயில்களும் சிறிது காலதாமதமாக சென்றன.

இன்று (நேற்று) இரவிற்குள் ரெயில் பாதை சரி செய்யப்படும் எனவும், நாளை (இன்று) முதல் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து சீராகிவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்