காதலித்தபோது கர்ப்பம்: திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2024-05-04 23:29 GMT

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெருவருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பழனிசாமி(வயது 40), கூலி தொழிலாளியான இவரும் கம்மாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயது பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது இருவரும் நெருங்கி பழகியதால் அந்த பெண் கர்ப்பமானார். இதையறிந்த பழனிசாமி கர்ப்பத்தை கலைத்தால் உன்னை திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண் பழனிசாமியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு பழனிசாமி நீ வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதுடன், சக்திவேல் என்பவருடன் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சக்திவேல் உள்பட 2 பேர் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக பழனிசாமியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்