8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு: சேலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மேடையில் பெண் விவசாயி கண்ணீர் விட்டு கதறல்

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-06-23 22:30 GMT
சேலம், 

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மேடையில் பெண் விவசாயி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

சேலம்-சென்னை பசுமை சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் தமிழக அரசை கண்டித்து சேலத்தில் தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாயிகள், பாதிக்கப்படும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியதாவது:-

பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் உள்பட 5 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பொதுவாக நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் தற்போது பிரதமர் மோடியின் சட்டத்தால் முன் அறிவிப்பின்றி நிலம் கையகப்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கும் இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.

விவசாய நிலத்தை பறிக்க விடாமல் விவசாயிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும். தூத்துக்குடி போல துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தாலும் இங்கு முதல் ஆளாக நான் நிற்பேன். விவசாயிகள் கவலைப்படாமல் தைரியமாக இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஆர்ப்பாட்ட மேடையில் பெண் விவசாயி லட்சுமி பேசும்போது, ‘எனது 5 ஏக்கர் நிலம் பறிபோகிறது. நிலத்திற்கு பதிலாக வீடு, வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதை வைத்து என்ன செய்வது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்’ எனக்கூறி மேடையில் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர், மரவள்ளிக்கிழங்கு, வாழை மரங்கள், சோளம், கொய்யா, தக்காளி போன்ற பயிர்களை கொண்டு வந்திருந்தனர். ஏர் கலப்பையுடன் மாடுகளையும் அழைத்து வந்திருந்ததை காணமுடிந்தது.

மேலும் செய்திகள்