தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தகவல்

தமிழகத்தில் நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

Update: 2018-08-15 06:45 GMT
சென்னை,

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தகவல் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,

”தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு எச்சரித்துள்ளதால் அந்தமான், வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 

காவிரி, பவானி, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் கரையோரம் சென்று யாரும் செல்ஃபி எடுக்க வேண்டாம். தடை செய்யப்பட்ட ஆற்றுப்பகுதிகளில் யாரும் நீச்சலடிக்கக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட தரைப்பாலங்களை பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டாம். 

அதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 9 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், நெல்லை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெள்ளதடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 27 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.

மேலும் செய்திகள்