சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை

விஜய் நடித்துள்ள சர்கார் போஸ்டரை கிழித்த விவகாரத்தில் வாலிபர் ஒருவர் இறந்து போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-07 10:59 GMT
சென்னை,

தீபாவளியை முன்னிட்டு சர்கார் படம் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை பல இடங்களில் ஒட்டிக் கொண்டாடினர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை சேர்ந்த  மணிகண்டன் என்பவரது வீட்டுக்கு அருகே சர்கார் படத்துக்கு விஜய் ரசிகர்கள் சிலர் பேனர் வைத்திருந்தனர். குடிபோதையில் இருந்த மணிகண்டன், சர்கார் பேனரைக் கிழித்துள்ளார். ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 

உறவினர்கள் மணிகண்டனை மீட்டு அவரது சித்தப்பா வீட்டுக்குள் தள்ளி வெளிப்பக்கமாக கதவை பூட்டியுள்ளார். தன்னைத் தாக்கியவர்களை திரும்பத் தாக்க வேண்டும். கதவைத் திறந்து விடுங்கள்’ என்று மணிகண்டன் கூச்சலிட்டார். உறவினர்கள் கதவைத் திறக்கவில்லை. விஜய் ரசிகர்கள் மேலும் சிலர் அப்பகுதியில் திரண்டனர்.

சிலமணி நேரம் கழித்து, உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் பிணமாகத் தொங்கினார். மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பூட்டியிருந்த கதவைத் திறந்து மணிகண்டனை அடித்துக் கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்