40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் திருநாவுக்கரசர் பேட்டி

40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-13 22:15 GMT
சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கேஸ்.இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் உத்தரவின்படி நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் மேலாண்மை குழு உள்பட பல்வேறு குழுக்களை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு கட்டங்களாக கூட்டம் நடத்தப்படும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பலமாகவும், வலுவாகவும் இருக்கிறது. இந்த கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும்.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை கண்டறிந்து, குடிநீர் வசதி உள்பட பல்வேறு மேம்பட்ட வசதிகளை அரசு செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர். இதேபோல தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்