ஜாக்டோ ஜியோ போராட்டம்; 1,111 பேரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது பள்ளி கல்வி துறை

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 1,111 ஆசிரியர்களின் பணியிடை நீக்க உத்தரவை பள்ளி கல்வி துறை ரத்து செய்துள்ளது.

Update: 2019-02-13 12:12 GMT
சென்னை,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி 22ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

அவர்களை உடனடியாக பணிக்கு திரும்பும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு திரும்பவில்லை எனில் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என பள்ளி கல்வி துறை எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதன்பின் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்த நிலையில், 1,111 ஆசிரியர்களின் பணியிடை நீக்க உத்தரவை பள்ளி கல்வி துறை ரத்து செய்துள்ளது.

மேலும் செய்திகள்