தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-02-14 10:18 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  இந்த கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வறுமை கோட்டிற்கு கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என கூறினார்.  

இதன்பின் 2வது நாளில் பட்ஜெட் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.  3வது நாளான நேற்று ஆசியாவிலேயே பெரியதாக சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா நிறுவப்படும் என்று சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தொடர்ந்து இன்று நடந்த 4வது நாள் கூட்டத்தொடரில், நம் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் வித்திட்ட பல ஆன்றோர்களையும், சான்றோர்களையும் பாராட்டும் வகையில் மற்றும் கவுரவப்படுத்தும் வகையில் பல அறிவிப்புகளை 110வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதன்பின் கூட்டத்தின் முடிவில் சபாநாயகர் தனபால் தமிழக சட்டசபையானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்