மதுரை சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு

மதுரை சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2019-03-12 06:09 GMT
சென்னை,

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது எனவும், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மேலும், 21 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள அதே நாளில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருப்பதால், வாக்குப்பதிவில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.  

எனவே, தென்மாவட்ட மக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா நாளில் நடைபெற உள்ள தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  இதையடுத்து, சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக  மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று 2-வது நாளாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. 
தேர்தல் நடைபெறும் நாளில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மதுரை தொகுதி மக்களவை தேர்தலை தள்ளி வைக்க இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்