பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். #KamalHassan

Update: 2019-03-14 17:18 GMT
சென்னை,

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் , “தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் மிக அலட்சியமாக வெளியிட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் செயல்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க முடியும்?, வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாக கூறும் நிலையில் எப்படி வெளியானது?. பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே, உங்களுக்கு பதறவில்லையா?, மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் மட்டுமின்றி காப்பாற்ற துடிப்போருக்கும் தண்டனை உண்டு. இந்த விவகாரத்தில் அரசாங்கம் அமைதி காக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே ஏன்?” என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்