தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும் - ராமதாஸ்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

Update: 2024-05-06 09:21 GMT

சென்னை,

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில், அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மாணவர்களை விட மாணவியர் 4.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.37% ஆக உள்ள நிலையில், பெண் தெய்வங்களான மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.44% ஆக அதிகரித்திருக்கிறது. நினைவு தெரிந்த நாளில் இருந்து தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விஞ்சி வரும் பெண் தெய்வங்களுக்கு எனது வாழ்த்துகள்.

தேர்ச்சி விகிதத்தில் பெண் தெய்வங்களை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்