கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்று ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் - மு.க.ஸ்டாலின்
கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்று ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தஞ்சையில் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வாக்கு கேட்கிறேன். பிறந்த ஊரான திருவாரூரில் தொடங்கி வளர்ந்த ஊரான தஞ்சைக்கு வந்துள்ளேன்.
தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஆட்சியா நடக்கிறது? மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நிலை ஏற்படத்தான் போகிறது.
எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு ஈடாகாது. அதிமுக ஆட்சிக்கு ஆதரவளித்த 18 பேரிடம் தற்போது பதவிகள் இல்லை. 18 பேருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பதே என் கேள்வி. கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்று ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.