மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் ஆஜராகி நிர்மலா தேவி விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து அவருடைய ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் 12ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்படி நிர்மலா தேவி விசாரணைக்கு இன்று மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். நீதிபதியின் தனி அறையில் சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.