‘மாயாவதியும், மம்தா பானர்ஜியும் பிரதமர் ஆகும் கனவில் மிதக்கின்றனர்’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

‘மாயாவதியும், மம்தா பானர்ஜியும் பிரதமர் ஆகும் கனவில் மிதக்கின்றனர்’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி;

Update:2019-05-09 04:30 IST
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. அதிகாரிகள் செய்யும் கவனக்குறைவால் தேர்தல் வழிமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடக்கூடாது.

பிரதமரை குறை சொல்லும் தி.மு.க.வின் பழைய கதைகளை தோண்டி சொல்ல ஆரம்பித்தால் ஸ்டாலின் திண்ணை பிரசாரத்திற்கும் போக முடியாது. ஏன் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாது. நாகரிகமாக சில விஷயங்களை வைத்துள்ளோம். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

எனக்கு ஆறுதல் சொல்வதாகவும், நோட்டாவை தாண்ட மாட்டேன் என்றும் சிலர் கூறுகின்றனர். மக்களை சந்திக்காதவர்கள் தான் இவ்வாறு கூறுகின்றனர். நான் மக்களை துணிச்சலாக சந்திப்பேன். மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன்.

தங்கதமிழ்செல்வன் கூறியது மூலம் தி.மு.க.வுடன் டி.டி.வி.தினகரன் மறைமுக கூட்டணி அமைத்து இருப்பது உண்மையாகிவிட்டது. சுயநலத்திற்காக அரசியல் செய்யும் மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் ஆகியோர் பிரதமர் ஆகும் கனவில் மிதக்கின்றனர். மோடி தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்