நாளை முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்: ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது வழக்குப்பதிவு தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர் களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-05-20 22:26 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவம் நடந்து நாளையுடன் (புதன்கிழமை) ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

இதன் நினைவு தினம் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள், நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நினைவேந்தல் கூட்டத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைவேந்தல் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் ஸ்டெர்லைட் போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் உள்பட 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று அவர் களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்காக நேற்று காலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பலர் தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்