ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து : பா.ரஞ்சித் பேசிய வழக்கில் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? - நீதிபதி

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய வழக்கில் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என மதுரை ஐகோர்ட் நீதிபதி கேள்வி விடுத்து உள்ளார்.

Update: 2019-06-24 10:20 GMT
மதுரை,

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக தம்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தொடர்ந்த வழக்கில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா என  ஐகோர்ட்  மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  நீதிபதி பாரதிதாசன் முன்பு இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, தமிழக அரசு வெளியிட்ட புத்தகத்திலேயே பா.ரஞ்சித் பேசியதற்கான குறிப்புகள் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது.

மேலும் அரசியலமைப்பு சட்டப்படி மனுதாரருக்கு பேச்சுரிமை உள்ளதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழக அரசு பதிப்பித்த புத்தகத்தில், பயிர் செய்வோர் நிலத்தை தாங்களே வைத்துக் கொண்டு, பயிர் செய்யாதோர் ஒப்படைக்க வேண்டும் என்று சோழர் காலத்தில் அறிவிப்பு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, மனுதாரர் பேசியது போன்ற குறிப்புகள் இல்லை எனவும் நீதிபதி கூறினார்.

தலித் மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக கூறியதற்கான ஆதாரம் குறித்தும், அவ்வாறு பேசியதற்கான நோக்கம் குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்