‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு

டிக்-டாக் வீடியோ மூலம் ஏற்பட்ட தொடர்பால் திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர், திராவகம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்த காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-24 22:03 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை இலந்தை குளத்தை சேர்ந்த அருள்செல்வன் மகன் மரிய புஷ்பராஜ் (வயது 22), ஆட்டோ டிரைவர். இவர் செல்போனில் ‘டிக்-டாக்’ செயலியில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார். அப்போது நடிகர்கள் குரலில் பல்வேறு பாடல்கள் மற்றும் வசனங்களை பேசுவதுபோல் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார்.

இதேபோல் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சங்கீதா (20) என்பவர் தனது வீடியோக்களை ‘டிக்-டாக்’ செயலியில் பதிவு செய்தார். பரஸ்பரம் 2 பேரும் இந்த வீடியோக்களை பார்த்தனர். ஒருவருக்கொருவர் வீடியோக்களுக்கு ‘லைக்’ கொடுத்து உள்ளனர். மேலும் 2 பேரது வீடியோக்களையும் ‘மிக்ஸிங்’ செய்தும் ஓடவிட்டுள்ளனர்.

காதல் மலர்ந்தது

இவர்களது ‘டிக்-டாக்’ நட்பு மூலம் ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசத்தொடங்கினர். பின்னர் இந்த நட்பு மெல்ல, மெல்ல காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் நேருக்கு நேர் சந்தித்து பேசி, பழகி வந்தனர். புஷ்பராஜ் தனது காதலியை ஆட்டோவில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றார்.

இந்த நிலையில் சங்கீதாவுக்கு இளம் வயதிலேயே லாரி டிரைவர் ஒருவருடன் திருமணமாகி, 1 பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. மேலும் பிரச்சினை காரணமாக கணவர், குழந்தையை எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்ட விவரமும் தெரியவந்துள்ளது. இதை அறிந்து புஷ்பராஜ் அதிர்ச்சி அடைந்தார். இருந்த போதிலும் சங்கீதாவின் தொடர் வலியுறுத்தலாலும், அவர் மீது கொண்டிருந்த காதல் மோகத்தாலும் புஷ்பராஜ், காதலியை கரம்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

தற்கொலை முயற்சி

இதுதொடர்பாக தனது பெற்றோரிடம் பேசினார். ஆனால், அவர்கள் புஷ்பராஜை கண்டித்தனர். சங்கீதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தனர்.

காதலிக்கு திருமணமாகி இருந்த பிரச்சினையால் தனது திருமணத்துக்கு இடையூறு ஏற்படுகிறதே? என்று கருதி மனம் உடைந்த மரிய புஷ்பராஜ் 2 நாட்களுக்கு முன்பு திராவகம் (ஆசிட்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதலியும் விஷம் குடித்தார்

இதுபற்றி சங்கீதாவுக்கு தெரியவந்தது. அவர் நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மரியபுஷ்பராஜை சந்தித்து பேசினார். பின்னர் அவர் அருகில் இருந்து கவனித்து வந்தார். ஆனால் இதற்கு புஷ்பராஜின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சங்கீதாவை வெளியே செல்லுமாறு கூறினார்கள்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்தார். பின்னர் மதுரைக்கு புறப்பட்டு செல்லலாம் என்று கருதி பஸ் ஏறுவதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். ஆனால் அவர் புஷ்பராஜை விட்டு விலகி செல்ல முடியாமல் தவித்தார். இதனால் விஷத்தை வாங்கி குடித்து விட்டு பஸ் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதைக்கண்ட புறக்காவல் நிலைய போலீசார், சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேற்கண்ட தகவல்கள் பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

டிக்-டாக் மூலம் அறிமுகமான காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்