அரசுக்கு கிடைக்கும் மது வருமானத்தை விட போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை மூலம் வரவு அதிகம் உள்ளதே? ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை, தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருப்பது போல் அல்லவா உள்ளது? என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2019-07-12 21:30 GMT
சென்னை, 

போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை, தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருப்பது போல் அல்லவா உள்ளது? என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்துள்ளது.

அபராத ரசீது

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அண்ணாநகர் பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய 90 ஆயிரம் பேருக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அதற்காக ஆதாரங்களை தாக்கல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவகாசம் வேண்டும்

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணாநகரில் போக்குவரத்து விதிமீறல் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ‘பென்டிரைவ்வில்’ பதிவு செய்து போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், அண்ணாநகரில் மட்டும் 90 ஆயிரம் பேருக்கு அபராதம் ரசீது அனுப்பியதாக கூறப்பட்டதே, அந்த ஆதாரங்கள் எங்கே? என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெரனல் அரவிந்த்பாண்டியன், ‘90 ஆயிரம் பேருக்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அபராதம் ரசீது தானாகவே அனுப்பும் விதமாக கணினி மென்பொருள் உள்ளது.

அதன்படி, ரசீது அனுப்பப்பட்டு வருகிறது. அதேநேரம், கண்காணிப்பு கேமராவில் பதிவான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த பதிவை 20 போலீஸ்காரர்கள் சரி பார்க்கின்றனர். எனவே, அபராதம் ரசீது அனுப்பிய விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

மது வருமானம்

அதற்கு நீதிபதிகள், ‘ஹெல்மெட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் உத்தரவிட்டால், அதை தீவிரமாக அமல்படுத்தாமல் உள்ளனர்’ என்று கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், ‘நாள் ஒன்றுக்கு சுமார் 8 லட்சம் போக்குவரத்து விதிமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில், ஒரு வழக்கிற்கு குறைந்தது ரூ.100 அபராதம் விதித்தாலும், 8 லட்சம் வழக்கிற்கு ரூ.8 கோடி அபராதம் வசூலிக்கப்படுமே. இந்த வருமானம், தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருப்பது போல் அல்லவா உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர்.

எத்தனை பேர் பலி?

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். ஹெல்மெட் அணியாததால் விபத்தில் சிக்கி எத்தனை பேர் பலியாகியுள்ளனர்? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்