உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் அழைப்பு

முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரை போல உடல் உறுப்பு தானங்களை வழங்க அனைத்து உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-07-16 11:03 GMT
சென்னை,

சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, தமிழகத்தில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தகவல் வருவதாக கூறினார். 

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு உடலுறுப்புகள் கொண்டு வரப்படுவதாகவும், தமிழகத்தில் இருந்து ஒரு உறுப்புகள் கூட வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில்லை என்றார்.

உடல் உறுப்பு தானத்தின் அவசியம் அறிந்து சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருப்பதாக பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்தார். 

அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆகியோரும் விண்ணப்பித்திருப்பதாகவும், அனைத்து உறுப்பினர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்