மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது -மைத்ரேயன் வேதனை
மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது என அ.தி.மு.க முன்னாள் எம்பி மைத்ரேயன் வேதனை தெரிவித்தார்.
சென்னை
அதிமுக உறுப்பினர்கள் மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், ரத்னவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் நேற்று மக்களவையில் உருக்கமாக பேசி விடைபெற்றனர்.
ஓய்வு பெற இருக்கும் நிலையில் மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி. உருக்கமாக பேசினார். அப்போது இந்தநேரத்தில் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததற்காகவும், என்னை 3 முறை இந்த மன்றத்திற்கு அனுப்பியதற்காகவும் அன்பான தலைவரான அம்மா (ஜெயலலிதா)வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த எனக்கு தற்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்து மாநிலங்களவை பரிசீலிக்கவோ, இரங்கல் தெரிவிக்கவோ இல்லை, நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்றார். தான் மாநில அரசியலில் கவனம் செலுத்தப்போவதாகவும் கூறினார்.
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது. தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன், வாய்ப்பு அளிக்கவில்லை. ஒற்றை தலைமை, இரட்டை தலைமை இரண்டிலுமே சாதக, பாதகங்கள் உள்ளது என கூறினார்.