சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள்

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2019-08-09 11:17 GMT
சென்னை

அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த இயக்குநர் குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

இதில் மாநகரம், விரைவு மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், புதிய பேருந்துகளின் இயக்கம், வசூல் நிலவரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,160 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 881 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவற்றை நல்ல முறையில் பராமரித்து வருவாயைப் பெருக்க கேட்டுக் கொண்டார். தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறும் வசதி செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சாரப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக பொதுப்பணி மற்றும் மின்சாரத் துறைகளின் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். முழு அர்ப்பணிப்புடன் தரமான சேவையை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்