அத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா? -அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில்

அத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

Update: 2019-08-13 11:08 GMT
சென்னை

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளி தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.

மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். அந்த வகையில் சயன கோலம் முடிந்து நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்ச்சி என்பதால் அத்திவரதரை காண லட்சக்கணக்கான கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை அத்திவரதரை 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து பரவசம் அடைந்துள்ளனர்.

அத்திவரதர்  தரிசனத்திற்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால்  கூட்டம் அலைமோதுகிறது .அத்தி வரதர் வைபவத்தின் 44 ம் நாளான இன்று இளம் பச்சை மற்றும் இளம் ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்தும், தோள் மற்றும் கைகளில் 8 கிளிகளுடன், கிரீடம் சூட்டியும், பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், இன்றும் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர். அதிகாலையிலேயே காத்திருந்த பகதர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். வரும் 16-ந் தேதியுடன் தரிசனம் நிறைவடைகிறது. இன்று 3 கிமீ தூரத்துக்கு வரிசையில் நின்று 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் வந்து தரிசித்து செல்கிறார்கள். பஸ் நிலையங்களில் இருந்து கூடுதலாக மினி பேருந்துகள் தவிர, நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நேற்று நள்ளிரவு 2 மணி வரை பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 43 நாட்களில் 89 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் தரிசனம் வரும் 16-ந் தேதியுடன் நிறைவடைந்ததும் அடுத்த 40 ஆண்டுகளுக்கு அத்திவரதரை குளத்தில் வைப்பதற்கான பணிகள் 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளம் மற்றும் குளத்தின் நடுவில் அமைந்துள்ள அத்திவரதர் மண்டபம் ஆகியவற்றை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குளம் தூர்வாரி வர்ணம் பூசப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் அத்திவரதர் தரிசனத்தை முதியவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் என ஏராளமானோர் இன்னும் பார்க்கவில்லை என்பதாலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டு மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ஆகம விதிப்படி முன்பு என்ன நடந்ததோ அதுவே இப்போதும் தொடரும். எனவே அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படாது என்றார்.

மேலும் செய்திகள்