ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க கூடாது - ஜெ.தீபக்
தனது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் நித்யா மேனன் நடிப்பில் ஒரு படமும், ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் ஒரு படமும் உருவாகி வருகிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு வலைத்தள தொடர் ஒன்றை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இந்த வலைத்தள தொடருக்கு ‘குயின்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், தனது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமோ, வலைத்தள தொடரோ யாரும் எடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வலைத்தள தொடருக்கு இதுவரை அனுமதி பெறவில்லை எனவும் தீபக் தெரிவித்துள்ளார்.