சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் - மத்திய அரசு தகவல்

சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

Update: 2019-09-20 13:03 GMT
சென்னை,

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கோரிய வழக்கு  சென்னை  ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது ட்விட்டரில் தவறான செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.  தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் போலி கணக்குகள் மீது ட்விட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை  எடுத்து உள்ளது. உலகம் முழுவதும், செய்திகளை வழங்கி வந்த ஆயிரக்கணக்கான போலி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன என ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர்.  தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது. வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும்  என நீதிபதிகள் தெரிவித்தனர்.

"சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம்" கொண்டு வரப்படும் என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது 

ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கு அக்டோபர் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்