தமிழகத்தில் எது நடந்தாலும் மாநில அரசுக்கு சம்பந்தம் உண்டு; கே.எஸ். அழகிரி சாடல்
தமிழகத்தில் எது நடந்தாலும் மாநில அரசுக்கு அதில் சம்பந்தம் உண்டு என கே.எஸ். அழகிரி சாடியுள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கூறும்பொழுது, நீட் தேர்வுக்கு மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். நீட் தேர்விற்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று மாநில அரசு கூறுவது தவறு. தமிழகத்தில் எது நடந்தாலும் மாநில அரசுக்கு அதில் சம்பந்தம் உண்டு என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழும், தமிழ் சார்ந்த தத்துவங்களும் உலகத்தில் என்றும் நிலை நிற்கக்கூடியவை என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நா. புகழேந்தி போட்டியிடுகிறார்.
நாங்குநேரி தொகுதி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி கே.எஸ். அழகிரி கூறும்பொழுது, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி கொள்கை மகத்தானது என்று கூறியுள்ளார்.