2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-10-15 12:05 GMT
சென்னை,

தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதம் அதிகமாக நீடித்து வந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலுமாக விலகும் எனவும் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர் சந்திப்பின் போது, “வரும் அக்டோபர் 17 முதல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள், ராயசீலா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வளிமண்டலத்தில் 1.5 கிலோமீட்டர் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்