இடைத்தேர்தல்: நாளை மாலையுடன் வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் - சத்யபிரதா சாகு
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி நாளை மாலை 6 மணியுடன் வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருந்து நாளை மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருந்து நாளை மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும். இடைத்தேர்தலுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு பெறும். சீமான் பேச்சு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இதுவரை அறிக்கை வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமார் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சத்ய பிரதா சாகு அறிக்கை கேட்டுள்ளார்.