ஜெயலலிதாவின் ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது- எடப்பாடி பழனிசாமி

நாங்குநேரி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2019-10-18 14:10 GMT
நாங்குநேரி,

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது, “மக்களுக்கான திட்டங்களை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது. மக்களின் தேவைகளை அறிந்து அதிமுக அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என்ன பேச வேண்டும் என்றே தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.

மக்களின் குறைகளை கேட்க திண்ணை பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோல திண்ணையில் அமர்ந்து மனு வாங்கியிருந்தால் அவர் நல்ல தலைவர் என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருவது வேடிக்கையானது. என்ன பேச வேண்டும் என்றே தெரியாமல் அவர் பேசுகிறார். திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டு தான் ஜெயலலிதா மரணமடைந்தார். 

ஜெயலலிதாவை வசைபாடிய ப.சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கியுள்ளது. தொடர்ந்து பொய் பரப்புரை செய்து வரும் ஸ்டாலின் உள்ளிட்டோரையும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது” என்றார். 

மேலும் செய்திகள்