உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கேட்டு பெறுவோம் -பிரேமலதா விஜயகாந்த் உறுதி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Update: 2019-11-07 07:49 GMT
சென்னை

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பெருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுவர் விவகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி சர்ச்சை நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல், சாலைகள் சீரமைப்பு, டெங்கு தடுப்புப் பணிகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்ததும்  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

தேமுதிகவின் பலம் எங்களுக்கு தெரியும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம், முதல்வரும் கட்டாயம் தருவோம் என உறுதி அளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிட, அதிமுகவிடம் இருந்து பெற வேண்டிய இடங்கள் குறித்து பேச ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

யார்  கட்சி ஆரம்பித்தாலும் ஆட்சியில் அமரவேண்டும் என்ற எண்ணத்தில் தான். அந்த எண்ணம் எங்களுக்கும் உள்ளது. நாங்களும் ஆட்சியில் அமருவோம் அதற்கான நேரம் வரும்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு கேப்டன் விஜயகாந்த் கம்பீரமாக வருவார்.

திருவள்ளுவர் பிரச்சினையை அரசு சரியாக கையாள்கிறது. திருவள்ளுவர் பிரச்சினை தொடராதபடி பார்த்து கொள்ள வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்