கருணாநிதி போல பேசவோ, எழுதவோ தெரியாது, எதையும் முயற்சி செய்யும் துணிவு எனக்கு உண்டு - மு.க.ஸ்டாலின்
கருணாநிதி போல பேசவோ, எழுதவோ தெரியாது, எதையும் முயற்சி செய்யும் துணிவு எனக்கு உண்டு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி பொதுக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டிற்குள் உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், கட்சி நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் பொது செயலாளருக்கு இருந்த அதிகாரத்தை, தலைவருக்கு வழங்கும் வகையில், திமுக சட்ட திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன். எனக்கு கருணாநிதி போல் பேசவோ, எழுதவோ தெரியாது. எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு. வெற்றி சாதாரணமாக கிடைக்காது, கிடைக்கவும் விட மாட்டார்கள்.
ஒற்றுமையின்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது, மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார் அதை பூட்டுப்போட விடுவோமா? முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால் அதை வெளியிடாமல் இருப்பார்களா? கொள்ளை கூட்டத்தை வெளியனுப்புவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.