உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் பாடுபட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் பாடுபட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை,
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது, அதற்காக செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள், புறநகர் மற்றும் மாநகர மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும், அதற்கு கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், அரசு நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.