தமிழகம் முழுவதும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது -முதலமைச்சர் பழனிசாமி

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2019-11-13 14:26 GMT
சென்னை,

மத்திய அரசின் திட்டப்படி இந்தியாவில் நூறு நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உட்பட 12 நகரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் ரூ.39.36 கோடி செலவில் நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையின் இருபுறங்களிலும்  அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் சாலையில் உள்ள அனைத்து சுவர்களிலும் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சாலையில் உள்ள மரங்களை சுற்றி பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதனை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பேட்டரி காரில் சென்று முதலமைச்சர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாண்டி பஜாரில் உலகத்தரம் வாய்ந்த சாலைகளும், நடைபாதைகளும் திறக்கப்பட்டுள்தாக தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகளில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்