அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது; தமிழிசை சவுந்தரராஜன்
அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புட்டபர்த்தி,
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைந்துள்ள சத்திய சாய் ஆசிரமத்தில் சத்திய சாய்பாபாவின் 94வது பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த 18ந்தேதி தொடங்கியது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாடு என பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து நேற்று 2வது நாளில் நடந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி வைத்து பேசும்பொழுது, வியாழக்கிழமை தோறும் சத்தியசாய் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
சத்திய சாய்பாபா தன்னுடைய வாழ்நாளில் மிகவும் உயர்ந்த சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றியிருக்கிறார். அவரது போதனைகளை அப்படியே பின்பற்றுபவர்கள் இந்த உலகில் ஏராளமானோர் உள்ளனர் என்று கூறினார். தொழில் ரீதியாக டாக்டர் ஆகிய நான் அரசியலில் நுழைந்து பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
பெண்கள் இன்றைய காலக்கட்டத்தில் அரசியலுக்கு வருவது என்பது மிகவும் சிரமமான செயலாக மாறிவிட்டது. ஆனால், பாரதீய ஜனதா கட்சி அரசியலில் எனக்கு சிறந்ததொரு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று கூறினார்.