கோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் - வைகோ கண்டனம்

கோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-23 09:50 GMT
சென்னை,

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ  இன்று  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் இனம், கோரப் படுகொலைக்கு ஆளான பின்னர், மேலும் ஓர் பேரபாயம் இப்போது ஏற்பட்டுவிட்டது. மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது, ராணுவ அமைச்சராக இருந்து, லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கோத்தபய ராஜபக்ச, இம்முறை அதிபர் ஆனதோடு, நான் சிங்களவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என பகிரங்கமாகவும், ஆணவத்தோடும் அறிவித்துள்ளார். 

பதவி ஏற்றபின்பு, முதல் வேலையாக, வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழர் வாழும் பகுதிகளில், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர், தெருக்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

இனக்கொலைப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் மாண்டனர். ஒரு லட்சம் தமிழர்கள் காணாமல் போயினர். 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்து கண்ணீர் வடிக்கின்றனர். தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுப்பதே கோத்தபய ராஜபக்சவின் குறிக்கோள் ஆகும். 

இவருக்கு, இந்திய அரசு அழைப்பு விடுத்து இருப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் ஆகும். எட்டுக்கோடி தமிழர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆக இருக்கின்றோம். எங்களது தொப்புள் கொடி உறவுகள் ஆகிய ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. இலங்கை அரசின் அடக்குமுறைகளில் இருந்து ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்