அ.தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த நடிகை நமீதா
அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகை நமீதா பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னை,
தமிழகத்தில் பா.ஜ.க.வை நிலைப்படுத்துவதற்காக அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா சென்னைக்கு வந்துள்ளார். அவர் இன்று பூக்கள் மற்றும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பேரணியாக சென்றார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர்.
இதேபோன்று கட்சி அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். தொடர்ந்து அவர் பேசும்பொழுது, எங்களுடைய கட்சி தலைவர்களின் வீடுகளில் இருந்து செயல்படவில்லை. அலுவலகங்களில் இருந்து செயல்படுகிறது. அதனாலேயே கட்சி அலுவலகம் தொடங்க முடிவு செய்தோம் என்று கூறினார்.
இந்நிலையில், பிரபல நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். அவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்துள்ளார். தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த அவர் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
நடிகர் ராதாரவியை தொடர்ந்து, நடிகை நமீதாவும் அ.தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.