ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும்; சென்னை ஐகோர்ட்டில் சட்டப்பஞ்சாயத்து வழக்கு
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் சட்டப்பஞ்சாயத்து வழக்கு தொடர்ந்து உள்ளது.
சென்னை,
27 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் நடைபெற்று முடிந்து உள்ளது. 2 வது கட்ட தேர்தல் வருகிற 30 ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடைபெறும்.
இந்த நிலையில் சட்டப்பஞ்சாயத்து அமைப்பு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யபட்டு உள்ள மனுவில்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது. சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்தாலும், ஒரே நேரத்தில் தான் முடிவு அறிவிக்கப்படும்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். எனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 30 ந்தேதி நடைபெற உள்ளது.