சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் ஐதராபாத், திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டன.