விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி பழுது

விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-08 06:19 GMT

விழுப்புரம்,

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சமீபத்தில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்த நிலையில், காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமுக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென பழுதாகின. சுமார் 1 மணிநேரம் வரை ஸ்ட்ராங் ரூமில் உள்ள 7 சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்றும் பின்னர் சரி செய்யப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பழனி தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்