புளிய மரத்தில் கார் மோதி விபத்து: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், டிரைவர் பலி

புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-01-12 23:00 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரை சேர்ந்தவர் பவ் என்கிற வெங்கடேசன் (வயது 31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணை தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறி எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் வெங்கடேசன், சென்னைக்கு செல்கிற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் வழிஅனுப்பி வைத்து விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காரை இடையப்பட்டியை சேர்ந்த செல்வம் (38) ஓட்டினார். நேற்று அதிகாலை அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி வீரபெருமாள்பட்டி சாலையில் வந்தபோது, கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் காரில் இருந்த அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன், டிரைவர் செல்வம் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கும், டிரைவர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெங்கடேசனின் தாயார் இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கதறி அழுத அமைச்சர்

அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலை சென்னையில் இருந்து மீண்டும் புதுக்கோட்டை சென்றார். பின்னர் இடையப்பட்டியில் உள்ள டிரைவர் செல்வத்தின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, விட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அமைச்சர் பரம்பூர் சென்று தனது உதவியாளர் வெங்கடேசனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதனை கண்ட அப்பகுதியில் கூடியிருந்த அனைவரும் கண் கலங்கினர். இதனையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர் பின்னர் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

முதல்-அமைச்சர் இரங்கல்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விபத்தில் உயிரிழந்த வெங்கடேசன், செல்வம் ஆகிய 2 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் சுகாதாரத்துறை அமைச்சரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும் நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்