தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
திண்டுக்கல்லில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார். திண்டுக்கல்லுக்கு செல்லும் வழியில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
பின்னர் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது என்றும் ரூ.2,850 கோடி மதிப்பில் சுகாதார திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
இதையடுத்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இந்தியாவிலேயே, ஒரே அரசாணையில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்த அரசு தமிழக அரசுதான் என்று கூறினார்.