மக்களின் அத்தியாவசிய தேவை பாதிக்கப்படக்கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மக்களின் அத்தியாவசிய தேவை பாதிக்கப்படக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை அடுத்து, சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை 31-ந் தேதி வரை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ஆலோசனை நடத்தி, மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள், இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரை நாளை (இன்று) முதல் ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.