முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடி தேவை; பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கோரிக்கை

முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2020-04-02 11:27 GMT
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தமிழகத்தின் சார்பில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசும்பொழுது, என்95 முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனை உபகரணங்களை கூடுதலாக வழங்க வேண்டும்.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதேபோன்று அவர், தமிழகம் கோரிய ரூ.9 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும்.  2019-20ம் ஆண்டு டிசம்பர்-ஜனவரிக்கான ஜி.எஸ்.டி. நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.  2020-21ம் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்