கொரோனா தடுப்பு பணிகள்; சிறப்பு குழுக்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்ட சிறப்பு குழுக்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
கொரோனா எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 1,101 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது. இதன்படி, 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுக்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது, மே 3ந்தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.