தமிழகத்தில் ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-05-23 12:53 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை சார்பில் இன்று வெளியான செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் தமிழகத்தில் இருந்து 710 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 49 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அவர்களில் மராட்டியத்தில் இருந்து 24 பேரும், ராஜஸ்தானில் இருந்து 6 பேரும் தொற்று உறுதியானவர்கள் ஆவர்.  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 9,876 பேர் ஆண்கள், 5,631 பேர் பெண்கள் மற்றும் 5 பேர் திருநங்கைகள் ஆவர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக உயர்ந்து உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 5 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 98ல் இருந்து 103 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்