கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு - முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Update: 2020-06-25 11:02 GMT
கோவை,

கோவையில் ரூ.72.40 கோடியிலான பல்வேறு திட்டங்களை இன்று  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்பு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 36,905 பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 292 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனா குறித்து மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ. 4145 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புத்துயிர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும். பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் குடிமராமத்து பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

"கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை  ஸ்டாலின் கூறவில்லை". கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார்.

கொரோனா  தடுப்பு குறித்து 16 முறை ஆலோசனை நடத்தி உள்ளேன். மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன். 13 பேர் கொண்ட குழுவின் ஆலோசனை 3 முறை நடந்துள்ளது. தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்