சாத்தான்குளம் வழக்கு: அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சி.பி.ஐ. திங்கள்கிழமை மனு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையில் சிபிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.

Update: 2020-07-17 09:00 GMT
தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினார்கள். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. இதன்படி, சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகனேஷ் உள்ளிட்ட 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. சிபிஐ காவலில் முடிந்ததும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரையும் வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் செய்திகள்