கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரம்: 6 பேர் சஸ்பெண்ட்

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் 6 பேரை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2020-07-31 05:56 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார், முன்னாள் ஆணையர் புகழேந்தி, கார்த்திகேயன், அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வழக்கின் விவரம்:-

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் கடந்த ஆண்டு வளர்ச்சி பணிகள் திட்டத்தில் நிதி செலவிடப்பட்டது குறித்து கடந்த 10 நாட்களாக வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இதில், பல்வேறு கணக்குகளை ஆய்வு செய்ததில் ரூ.60 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து, சேலம் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் அசோக்குமாருக்கு தணிக்கை குழுவினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் தணிக்கை குழுவினருடன் குளித்தலை நகராட்சியில் அண்மையில் முகாமிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றும் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சத்யா (வயது 45) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் நகராட்சி ஊழியர்களின் பொதுசேமநல நிதி, தன்பங்கேற்பு ஓய்வூதிய நிதி, சேமநல நிதி மற்றும் நகராட்சி நிர்வாக நிதிகளை சிபி, பாலமுருகன், பாலாஜி, சுப்ரமணி என இல்லாத நபர்கள் பெயரில், திறந்த காசோலைகளாக வழங்கி ரூ.59 லட்சத்து 73 ஆயிரத்து 435 மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக குளித்தலை நகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான மோகன்குமார், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, கணக்காளர் சத்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் செய்திகள்