நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு வலைவீச்சு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-08-31 21:36 GMT
நெல்லை,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், கல் அடைப்பு பிரச்சினைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றார். அப்போது அவர் தன்னுடைய 17 வயது மகளையும் உதவிக்கு அழைத்து வந்திருந்தார்.

அங்கு அவர்களிடம், அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மற்றொரு நோயாளியின் குடும்பத்தினர் நெருங்கி பழகினர். அப்போது அவர்களில் வாலிபர் ஒருவர், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவர், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று இளம்பெண்ணை மிரட்டினார்.

பின்னர் இளம்பெண்ணின் தாய்க்கு கல் அடைப்பு பிரச்சினைக்கு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து தாயும், மகளும் ராஜபாளையத்துக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் இளம்பெண்ணின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்தபோது, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவமும், அதனால் 6 மாத கர்ப்பிணியான விஷயமும் தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்ணின் குடும்பத்தினர், நெல்லை மாநகர அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி புகார் அளித்தனர். இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த தேதியின்போது, அரசு ஆஸ்பத்திரி அறையில் தங்கி இருந்த நோயாளிகளின் விவரங்களை சேகரித்து வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்