கோபியில் மொபட் மீது லாரி மோதியதில் உயிர் தப்பிய வாலிபர் -வாட்ஸ் அப்பில் வைரலாகும் விபத்து காட்சிகள்

கோபியில் மொபட் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிர் தப்பினார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

Update: 2020-09-15 00:15 GMT
கடத்தூர், 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலை பிரிவில் ஒரு லாரி நேற்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி திடீரென மொடச்சூர் சாலையில் திரும்பியது. அப்போது அந்த வழியாக பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த மொபட்டின் மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது.

இதனால் மொபட் லாரியின் முன்பக்க டயரில் சிக்கிக்கொண்டது. இதில் மொபட்டை ஓட்டி வந்த வாலிபர் முன்பக்க டயரில் சிக்கினார். மேலும் அவர் வலி தாங்க முடியாமல் “அய்யோ, அம்மா” என்று அலறினார். உடனே டிரைவர் லாரியை நிறுத்திவிட்டார்.

இதைப்பார்த்த அங்கிருந்த போக்குவரத்து போலீசார் உடனே ஓடிச்சென்றனர். பின்னர் லாரியில் சிக்கியிருந்த வாலிபரை வெளியே கொண்டு வந்தனர். இதனால் அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சி அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த விபத்து காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கோபி போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்