கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2024-04-29 05:02 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. அதனால் வட தமிழகம் உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என்றும் அதனால் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோடை வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அதிகளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும். சிறுநீரானது வெளிர்மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான நீர் பருக வேண்டும்.

சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், உப்பு கலந்து எலுமிச்சை, ஓ.ஆர்.எஸ்.உப்பு கரைசலை பருகலாம்.

வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது, தொப்பி அல்லது கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தி துணியில் துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். வீடுகளில் குளிர்ந்த காற்றோட்டம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சூரிய ஒளி நேராகப்படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரையிட்டு மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களை திறந்து வைத்து கொள்ளலாம்.

கோடை வெயிலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ எவரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக டாக்டர் அல்லது ஆம்புலன்சை அழைக்க வேண்டும். மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். குறிப்பாக இடதுபுறம் படுக்க வைக்க வேண்டும்.

நாடித்துடிப்பு, இதயதுடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.டாக்டருக்கும், ஆம்புலன்ஸ்சுக்கும் காத்திருக்கும்போது பாதிக்கப்பட்ட நபரை சமதரையில் படுக்க வைத்து, கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயர்த்தி பிடிக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்.கூடுதல் தகவலுக்கு தமிழக அரசின் 104 என்ற எண் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்